புதன், 12 மார்ச், 2014

அவங்க 'ஸ்தோத்திரம்' சொல்லுவாங்க. நாம் 'ஓம், ஓம்' என்று சொல்லணும்

தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் முத்துநகர் தொடர்வண்டியில் ஏறி அமர்ந்தேன். வண்டியின் உள்ளே ஒரு குடும்பத்தினர் அமர்ந்திருந்தார்கள். அவர்களை வழியனுப்ப வந்திருந்த இருவர் வண்டிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள். குடும்பத்தினருக்கு  அருகில் கிறிஸ்துவ கன்னியாஸ்திரி பெண் ஒருவர் அமர்ந்திருந்தார்.

வண்டிக்கு வெளியே நின்றிருந்த நபர் என்னிடம் பேச ஆரம்பித்திருந்தார்..

அவர்: தம்பி, எங்கே போறீங்க??

நான்:சென்னைக்கு போகிறேன்.

அவர்: தம்பிக்கு எந்த ஊரு??

நான்: ஆத்தூர் பக்கத்துல **** கிராமம்.

அவர்: அட, அருமையான கிராமமாச்சே!!!  xxx, yyy போன்ற ஆட்களுக்கு அந்த ஊருதானே!!

நான்: ஆமாம்னே...

அவர்: அந்த பொம்பளையிடம் (கிறிஸ்துவ கன்னியாஸ்திரி)கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. இல்லைனா ட்ரெய்னிலேயே மதத்தை மாத்திடுவாங்க.. ஆமாம், நீங்க இந்துதானே??

நான்: எனக்கு இந்த சாதி, மதமெல்லாம் ஒரு விசயமே கிடையாது. நான் தமிழன்..

அவர்: என்ன தம்பி, இப்படி சொல்லுறீங்க!! அவங்களும் தமிழன்தான். ஆனால் கிறிஸ்து, ஸ்தோத்திரம் என்று சொல்லுறாங்க.. நாமளும் பதிலுக்கு 'ஓம், ஓம்' என்று சொல்லனும். கரெக்டுதானே!!

நான்: அவங்க பத்தி எனக்கு தெரியும்.. அவர்கள் போன்ற ஆட்களிடம் நான் அவ்வளவு பேசுவதில்லை.

அவர்: சரி தம்பி, யாருக்கு ஒட்டு போட போறீங்க??

நான்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் சரியில்லையே!! யாருக்காவது போடுவோம்..


அவர்: ஜோயல் (மதிமுக)க்கு வாய்ப்பு கொடுத்தால் போடுவீங்களா??


நான்: ஆமாம்னே, அவரு பரவாயில்லை. எல்லா பிரச்சினைக்கும் முன்வந்து போராடுறார்.. அவருக்கு போடலாம்..

அவர்: தம்பி ஒரு மாற்றத்தை விரும்புறீங்க போல,ரைட்டு, நடக்கட்டும்..
இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா தம்பி?  அந்த மூணு வேட்பாளருமே கையில பைபிளோடு அலைபவர்கள், தீவிர கிறிஸ்டியன்ஸ்..

நான்: (எங்க போனாலும் எப்படிய்யா கரெக்டா மதத்துல வந்து நிக்குறீங்க என்று எண்ணிக் கொண்டேன்) ஓ!! அப்படியா!!

விவாதம் சற்றுநேரம் தொடர்ந்தது.. வண்டியும் கிளம்பியது..
குடும்பத்தினருடன் "ஓம், ஓம்" என்று சொல்லி அவர் விடைபெற்றார். அதாவது அந்த கன்னியாஸ்திரியுடன் அலெர்ட்டா இருக்க சொல்வதற்காக அந்த "ஓம், ஓம்"சிக்னல் கொடுத்தார்.

"நல்லவேளை, சாதியை கேட்காமல் விட்டார்" என்கிற மகிழ்ச்சி  இருந்தது, "ஒருவேளை கிராமத்து பெயரை வைத்து சாதியை கணித்துக் கொண்டாரோ!! என்கிற ஐயமும் எனக்குள் எழுந்தது.

"தன் சாதியே உயர்ந்தது, தன் மதமே உயர்ந்தது, மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருக்கணும்" என்கிற மோசமான மனநிலை இன்னும் நம் மக்களுக்குள் அப்படியே உள்ளது. :(

எம் முன்னோர்களை அடிமைப்படுத்தி, மார்பில் சீலை அணிய விடாமல் தடுத்தது இந்து மதத் திமிர்.
 கோவிலுக்குள் சூத்திரன் நுழைந்தால் தீட்டு என்று சொல்லி இன்றும் எம்மை அடிமைப்படுத்தும் மதம்  இந்து மதம்.
தமிழர்கள் கட்டிய கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டு தமிழையும், தமிழரையும் அனுமதிக்காத மதம்  இந்து மதம்.

 இந்தக் கதையெல்லாம் அந்த நபருக்கு தெரிந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.. தெரிந்திருந்தால் தன்னை இந்து சொல்லி பெருமைப் பீத்தியிருக்க மாட்டார்..

எந்த மதமாக இருந்தாலும் நாலு சுவற்றுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
சமுதாயத்தில் ஒரு மனிதனாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.