மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 நவம்பர், 2016

தேசபக்தி என்னும் பெயரால் திடீரென சாமி வந்து ஆடுபவர்களுக்காக....

"கறுப்பு பணம் ஒழிந்துவிட்டது. புதிய இந்தியா பிறந்து விட்டது. மோடி சாதித்துவிட்டார்" என  நம்பிக் கொண்டிருக்கும் நண்பர்களே!

முதலில் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் மதிப்பு சுமார் 16 லட்சம் கோடி. அதில் 500 மற்றும் 1000 ரூபாயில் இருக்கும் பணம் சுமார் 13 லட்சம் கோடி.
அதில் கறுப்பு பணம் 10 சதவீதம் என்று வைத்துக் கொள்வோம். அதாவது சுமார் 1.3 லட்சம் கோடி.

அதிலும் சிலர் முன்கூட்டியே கறுப்பை வெள்ளையாக மாற்றியிருப்பார்கள். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக RBI தகவல் உள்ளது. RBI இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

ஆகவே மீதம் உள்ள கறுப்பு பணம் சில ஆயிரம் கோடிகள் மட்டுமே. அரசின் இந்த அறிவிப்புக்குப் பின்னர் இதில் சில கோடிகள் வெள்ளையாக மாறியிருக்கும். எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் அழிக்கப்பட்ட கறுப்பு பணம் சில கோடிகள் மட்டுமே.

ஆனால் வெளிநாடுகளில் இந்திய கறுப்பு பண முதலைகள் பதுக்கியுள்ள பணம் 100லட்சம் கோடிக்கும் அதிகம் இருக்கும். நம்மூரு நத்தம் விஸ்வநாதனே 1000 கோடியை எளிதில் குவிக்க முடிகிறது. இந்த மாதிரி நத்தம் விஸ்வநாதன்கள் நாடு முழுக்க உண்டு. அரசியல், சினிமா, தொழில் என பல வழிகளில் சேர்த்து பதுக்கிய பணம் வெளிநாட்டு வங்கிகளில் பத்திரமாக உள்ளது.

கறுப்பு பணம் ஒழிப்பில் அரசுக்கு அக்கறை இருந்தால் இந்த 100 லட்சம் கோடியைப் பறிமுதல் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து சில கோடி பணத்தை மட்டும் அழித்துவிட்டு தன்னை கறுப்பு பண அழிப்பாளராகக் காட்டிக் கொள்வது மக்களை ஏமாற்றும் செயல்.

"இல்லை, வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க மோடி ஏதேனும் திட்டம் வைத்திருப்பார்" என நம்பினால் நீங்கள் அப்பாவியே!  வெளிநாட்டு வங்கி ஒன்று தங்களிடம் வங்கிக்கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை அரசிடம் ஒப்படைத்தது. அந்தப் பெயர்களை இன்றுவரை வெளியிடவில்லை மோடி அரசு. பெயரையே வெளியிடாதவர்கள் எப்படி அவர்களிடமிருந்து பணத்தை மீட்பார்கள்?

அது மட்டுமல்ல, இந்திய வங்கிகளில் 500 கோடிக்கும் அதிகமாக வாராக்கடன் வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியலை அரசிடம் கேட்டது உச்ச நீதிமன்றம். அந்தப் பட்டியலைக் கொடுக்க மறுத்ததும் மோடி அரசுதான்.

"மோடி என்ன செய்தாலும் குத்தம் சொல்வதுதான் உங்கள் வேலையா?" என நீங்கள் எதிர்கேள்வி கேட்கக் கூடும். நிச்சயம் அப்படி இல்லை. தேர்தலில் வாக்களித்தப்படி விலைவாசி குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, 15லட்சம் டெபாசிட் ஆகியவற்றை செய்துகாட்டும் பட்சத்தில் நிச்சயம் மோடி மீது விமர்சனங்கள் வராது.

ஆனால் இதையெல்லாம் ஒருகாலமும்  மோடி அரசால் செய்ய முடியாது. ஏனெனில் இங்கு உண்மையில் ஆட்சி செலுத்துவது கார்பரேட் முதலாளிகள்தான்.

"அது எப்படி? நாம மோடிக்குதானே ஓட்டு போட்டோம்? அவர்தானே பிரதமர்" என கேட்கும் அப்பாவியா நீங்கள்? உங்களுக்கு இரு உதாரணங்கள் சொல்கிறேன்.

1. மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் கம்பெனியிடம் கொடுத்தது மோடி அரசு. அதற்கு ஊதியமாக வசூலிக்கும் பணத்தில் கிட்டத்தட்ட 40% பணம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக மாணவர்களின் கல்விக்கடனில் 40 சதவீதத்தை தள்ளுபடி செய்திருக்கலாமே?. செய்யமாட்டார்கள். ஏனெனில் மாணவர்களை விட ரிலையன்ஸ் நலன்தான் அரசுக்கு முக்கியம்.

2.  நம்ம விவசாயிகள் ஆயிரக்கணக்கில் கடன் கேட்டால் வீட்டுப்பத்திரம், நிலப் பத்திரம் என அனைத்தையும் எடுத்து வரச் சொல்கிறது வங்கி. ஆனால் ஆஸ்திரேலியாவில் திவால் ஆன நிலக்கரி சுரங்கத்தை வாங்க அதானி நிறுவனத்திற்கு 600 கோடி பணத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கிறது SBI வங்கி. ஏனெனில் விவசாயிகளின் நலனை விட அதானியின் நலன் முக்கியம்.

"எல்லாம் சரி, இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு?"
என்று கேள்வி எழுப்புகிறீர்களா?
அதற்கான பதில்:
நீங்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம்தான். மத்தவன் சொல்வதை கேட்காதீர். இந்த சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை சமூகத்தின் அடித்தட்டிலிருந்து பார்க்கப் பழகுங்கள். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டால் பயனடையப் போவது யார் என ஆராயுங்கள்.
அதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் இல்லை என்றால் அமைதியாக வேடிக்கை பார்த்து கடந்து செல்லுங்கள். தேசபக்தி, நாட்டுநலன் என்னும் பெயரால் திடீரென சாமி வந்து ஆடாதீர்கள். உங்கள் ஆட்டத்தால் பாதிக்கப்படுவது இந்த சமூகத்தின் அடித்தட்டு மக்கள்தான்.

- குருநாதன்

வெள்ளி, 12 ஜூலை, 2013

ஹிந்து தேசியவாதி மோடி - இப்பவாவது நம்புங்க



நான் ஒரு ஹிந்து தேசியவாதி... அப்படி என்னைப் பற்றிக் கூறுவதிலும் எந்தத் தவறும் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக் சொல்லியுள்ளார் மீடியா புகழ் மோடி..


மோடி மதச்சார்பற்றவர் என அவரது தொண்டர் அடிப்பொடிகள் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ‘டேய் , அப்படியெல்லாம் கிடையாது. மோடி ஹிந்து மதத்தை தூக்கி பிடிப்பவர்’ என்று பலமுறை விவாதம் செய்திருக்கிறேன். ஒருபயலும் ஒத்துக்கொள்ள வில்லை.

இப்போது மோடியே சொல்லிவிட்டார். இப்போது என்ன செய்யப் போகிறார்கள் அவரது அடிப்பொடிகள்? வேறு என்ன!! இன்னொரு கதை எழுதி அடுத்த சினிமாவை அரங்கேற்றுவார்கள்.

மோடி இவ்வாறு சொன்னது சரியா? தவறா? என்ற கேள்விக்கே இடம் கிடையாது. ஒருவன் தன்னை ஹிந்து என்று சொல்லிக் கொள்வதற்கும், ஹிந்து தேசியவாதி என்று சொல்லிக் கொள்வதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. ஒரு தேசத்தையே மதத்தின் பெயரால் அடையாளப்படுத்துகிறது ‘ஹிந்து தேசியவாதி’ என்னும் வார்த்தை.

இதை மோடி சொல்லியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதுதானே அவர் சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை. இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கும் கொள்கை.
விஷுவ இந்து பரிஷத், சிவ சேனா, சூ சாமி, இந்து முன்னணி என பல அமைப்புகளும் இதே கொள்கை உடையவை. அனைவரும் ஒரே கூட்டணியில் நிற்கிறார்கள்.

தான் சொல்வது தவறு என்று மோடிக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் மதவெறியூட்டி விட வேண்டுமல்லவா!! மதவாதத்தை விதைத்து ஓட்டு அறுவடை செய்ய வேண்டுமல்லவா!!

தான் இஸ்லாமிய தேசியவாதி என்றோ, கிருஸ்தவ தேசியவாதி என்றோ யாராச்சும் சொல்லியிருந்தால் [எந்த காலத்திலும் அப்படி யாரும் சொல்லக் கூடாது] இந்த நேரத்திற்கு எதிர்ப்புகள் பலமாக கிளம்பியிருக்கும். சொன்னது மோடியாச்சே!! அவர் சொன்ன கருத்தை தான் வெளியிடுகின்றன தவிர அவரைக் கண்டித்து ஒரு செய்தியையும் காணோம்.

பிஜேபி ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை. மோடி  பிரதமர் ஆகப் போவதும் இல்லை. ஒருவேளை வந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்க அச்சமாக இருக்கிறது.
பரிவார் அமைப்புகளும், சேனா அமைப்புகளும் தமிழகத்தில் ஒருபோதும் தலையெடுக்க கூடாது.
காங்கிரசை எதிர்க்கிறோம் என்னும் பெயரில் பலரும் பிஜேபியின்  பிற்போக்கு கொள்கைகளுக்கு ஆதரவு அளித்துக்கொண்டிருப்பது வருத்தம்!!

சாதி வெறி, மத வெறி வேண்டாம்!
எவர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டாம்!
மனிதநேயம் வளர்த்து மனிதர்களாய் இருப்போம்!