வெள்ளி, 5 டிசம்பர், 2014

பனையோலைக் கொழுக்கட்டை செய்யும் முறை

பனையோலைக் கொழுக்கட்டை சாப்பிட்டு நாலு வருடங்களுக்கும் மேலாகிறது.
சென்னையில் பனையோலையும் இல்லை, பனை மரமும் இல்லை.
இந்தக் கார்த்திகைக்கு (இன்று) எப்படியாவது சாப்பிட வேண்டும்,
ஊருல இருந்து பனையோலை வருகிறது.  :)


கொழுக்கட்டையை ஓலைக்குள் வைப்பது, ஓலையைக் கட்டுவது மட்டுமே எனக்குத் தெரியும்.
ஆனாலும் சமையல் குறிப்பை(?) தோராயமாக எழுதுகிறேன்.

தேவையானவை: பச்சரிசி, பொடியாக்கப்பட்ட கருப்பட்டி அல்லது சர்க்கரை அல்லது பொடியாக்கப்பட்ட மண்டை வெல்லம், வறுத்த சிறுபருப்பு.
இவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
(அதிக தண்ணீர் சேர்த்தால் ஓலைக்குள் சரியாக வைக்க முடியாது. வைத்தாலும் வெப்பத்தில் இளகிவிடும்.அப்புறம் கொழுக்கட்டை கிடைக்காது. கூழ்தான் கிடைக்கும்
)
பின்னர் படத்தில் உள்ளபடி பனை ஓலைகளை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஓலைகளுக்கு நடுவில் மாவை வைத்து மற்றொரு ஓலைத்துண்டால் மூடிக் கொள்ளவேண்டும்.
இரண்டையும் ஒரு ஓலை நாற்றால் கட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு மண்பானைக்குள் சிறிது நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
(அளவு சரியாக தெரியவில்லை.)
நாம் கட்டிய பனை ஓலைத் துண்டுகளை வரிசையாக பானைக்குள் அடுக்கிக் கொள்ள வேண்டும்.
கீழ்ப்பகுதியில் மாவு இல்லாத பனை ஓலை துண்டுகளையும் போடுவார்கள் (அதிக வெப்பத்தால் கொழுக்கட்டை கருகிவிடக் கூடாதுல்ல.. ).
பானையை நன்கு மூடி விட வேண்டும்.

அடுப்பைப் பற்ற வைத்து தண்ணீரைக் கொதிக்க செய்ய வேண்டும்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் அடுப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
உடனே திறந்து விடாமல் அடுப்பிலேயே பானையை வைத்துக் கொள்ள வேண்டும்.
சில நிமிடங்கள் கழித்து பானையைத் திறந்து, பனை ஓலையை அகற்றி கொழுக்கட்டையை உண்ணலாம்.
வாசமும் சுவையும் அருமையாக இருக்கும்.

1 கருத்து: