வெள்ளி, 28 நவம்பர், 2014

சாதி இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒரே வழி

திறமைக்கு மதிப்பில்லை.
SC/ST பிரிவினர் குறைந்த் மார்க் எடுத்தாலும் தேர்வாகி விடுகிறார்கள்.
சாதி இட ஒதுக்கீடுதான் சாதியை வளர்க்கிறது.

சாதி இட ஒதுக்கீடு பற்றி பேசும்போது முன்வைக்கப்படும் பொய்யான வாதங்கள் இவைதான்.
வெளிப்படையாக சொல்வதென்றால், நானும் அந்தக் கருத்தைத்தான் கொண்டிருந்தேன்.
ஆனால் அது பொய் என்று பின்னால் அறிந்து கொண்டேன்.

சாதி இட ஒதுக்கீடு என்பது SC/ST பிரிவுக்கு மட்டுமே உள்ளது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
BC, MBC, SC என அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு உள்ளது.

தமிழகத் தேர்வாணையத்தில் பல தேர்வுகள் எழுதி அதில் உள்ள கட்-ஆப் மதிப்பெண் பற்றி அறிந்ததால் சொல்கிறேன்.
அங்கு திறமை இருந்தால்தான் எவராக இருந்தாலும் தேர்வாக முடியும்.

உதாரணத்திற்கு குரூப்- 2 தேர்வை எடுத்துக் கொள்வோம்.
முதல்நிலைத் தெருவில் கட்-ஆப் மதிப்பெண்
BC - 152, MBC - 150, SC - 148, ST - 146 என்றுதான் இருக்கும்.

மதிப்பெண் அடிப்படையில்தான் திறமையை கணக்கிட்டால், தேர்வில் 130-க்கு மேல் பெறுகிற அனைவரும் திறமையானவர்களே!
அந்த அளவுக்கு தேர்வு கடினமாக இருக்கும். கணிதம் , இயற்பியல், வேதியியல், விலங்கியல், பொது அறிவு, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள், இந்திய வரலாறு, தமிழ் வரலாறு, வணிகம் என பாடத் திட்டத்தை புரிந்து கொள்ளவே ஒரு வருடம் ஆகும்(முடிந்தால் கடந்த தேர்வு வினாத்தாளை வாங்கிப் பாருங்கள்)

அப்புறம் மெயின் தேர்வு. அதுக்கு பயந்துதான் நான் தேர்வு எழுதுவதையே நிறுத்திட்டேன்.
அதில் 1000 பெருக்கு 20 பேரை மட்டுமே அடுத்த சுற்றான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள்.
அப்படியானால் மெயின் தேர்வு எவ்வளவு கடினமாக இருக்கும் என நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள்.

அப்புறம் நேர்முகத் தேர்வு. அதில் நாலு பேரு  ரவுண்டு கட்டி  கேள்விகளைத் தொடுப்பார்கள்.

அவ்வளவையும் கடந்து வருகிறவன் எப்படி திறமை இல்லாதவனாக இருப்பான்?
தமிழகத் தேர்வாணையம் மட்டுமல்ல, மத்திய தேர்வாணையத்திலும் இதுதான் தேர்வுமுறை.

அனைவரும் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்.
உங்க ஊரில் சாதி பார்த்துதானே சுடுகாடு கூட இருக்குது.
உங்க ஊரில் மட்டுமல்ல, எல்லா ஊரிலும் அப்படிதான் இருக்குது.
அதை முதலில் ஒழித்து ஒரு முன்னுதாரணத்தைக் காட்டினால் அடுத்த நிமிடமே 'சாதி இட ஒதுக்கீடு ஒழிப்பை' நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

குரூப்-2 தெருவில் பணியாணை பெற்ற, முதுநிலை பட்டத்தில் தங்க மெடல் வாங்கிய ஒருவரை போனவாரம் திண்டுக்கல்லில் சாதிவெறியர்கள் கொன்று கிணற்றில் வீசி விட்டார்கள். வேறுசாதிப் பெண்ணைக் காதலித்ததுதான் காரணம்.
'திறமையானவரை எதுக்குடா கொன்றீங்க?' என்று பலரும் கொதித்து எழுந்திருக்க வேண்டுமே!
இல்லையே! சாதி குறுக்கே நிற்குதே!
பாதி பேருக்கு இந்த செய்தியே தெரியாது. http://news.vikatan.com/article.php?module=news&aid=34947

இந்த லட்சணத்துல சாதி இட ஒதுக்கீடுக்கு எதிராக பேசுவது எவ்வளவு அயோக்கியத்தனம்!

சாதி இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒரே வழி சாதியை ஒழிப்பதுதான்.


1 கருத்து: