செவ்வாய், 3 ஜனவரி, 2017

திராவிடத்தின் விளம்பர அரசியலும், தலித் கேடய அரசியலும்

சமீப காலமாக பட்டியல் வகுப்பு மக்களைக் கேடயமாக்கி நடத்தப்படும் தமிழர் விரோத அரசியல் நடத்தப்படுவது தெரிகிறது.
அதாவது தமிழ்நாட்டில் எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் அதனை சாதியப் பிரச்சினையோடு ஒப்பீடு செய்து போராட்டத்தினை மழுங்கடிக்கும் வேலையை சில திராவிட அறிவாளிகள் செய்கிறார்கள். அது புரியாமல் பட்டியல் வகுப்பு மக்கள் சிலரும் இந்த வலைப்பின்னலில் வீழ்கிறார்கள்.

"காவிரிக்குப் போராடுறீங்களே, சாதியத்திற்கு எதிராகப் போராடுனீங்களா?

ஜல்லிக்கட்டுக்குப் போராடுறீங்களே, சாதியத்திற்கு எதிராகப் போராடுனீங்களா?"
என குதர்க்கமானக் கேள்விகளைக் கேட்டுவிட்டு நகர்ந்துவிடுவார்கள் திராவிட அறிவாளிகள். மற்றதை பட்டியல் வகுப்பு தோழர்கள் தொடர்வார்கள்.

தமிழ்நாட்டில் சாதி ஒழிய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இது போன்ற ஒப்பீடுகளால் சாதி ஒழிந்து விடுமா?
தமிழகத்தில் பெரும்பான்மை மக்களை உறுப்பினர்களாகக் கொண்ட திராவிடக் கட்சிகள் ஒருநாளும் சாதி  ஒழிப்பை பேசியதில்லையே? ஏன்? இதுகுறித்து பட்டியல் வகுப்பு தோழர்கள் என்றாவது சிந்தித்ததுண்டா?

தருமபுரி நாயக்கன்கோட்டை  சேரி எரிப்பில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக கட்சிகளை சார்ந்த அனைவரும் ஈடுபட்டார்கள். திமுக உறுப்பினர்கள் பதினாறு பேர் ஈடுபட்டார்கள். அவர்கள் மீது திமுக என்ன நடவடிக்கை எடுத்தது? திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் திமுகவை நோக்கி ஏன் கேள்வி கேட்பதில்லை?
அப்புறம் எப்படி சாதிய ஒடுக்குமுறைகள் குறையும்??

ஆட்சியில் எந்த திராவிடக் கட்சி அமர்ந்தாலும் "திராவிட ஆட்சி" என புகழும் சுபவீ, வீரமணி வகையறாக்களை கேள்வி கேட்காமல் காவிரிக்கும், ஜல்லிகட்டுக்கும் வந்து போராடுபவர்களை மட்டுமே கேள்வி கேட்பது ஏன்? அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களை கேள்வி கேட்காமல் போராட்ட சக்திகளை கேள்வி எழுப்பி என்ன சாதிக்கப் போகிறோம்?

உண்மையில்   "பட்டியல் வகுப்பு மக்களுக்கு நாங்கள் போராடுவோம். அவர்கள் எங்களுக்கு கீழே இருக்க வேண்டும்" என்கிற ஆதிக்க மனப்பான்மைதான்   திராவிட அரசியலில் இருக்கிறது.

சமீபத்திய இரு உதாரணங்களை சொல்கிறேன்.

1. கலைஞரை சந்திக்க திருமா சென்றபோது அரசியல் நாகரீகம் என்றார்கள் திமுகவினர்.
அதுவே சசிகலாவை சந்திக்க திருமா சென்றபோது "சசியை சந்தித்த முதல் அடிமை" என்றார்கள். திருமா அடிமை மனப்பான்மையோடு இருக்கிறார் என சாடினர்.
தேவந்திரர்களை போல சுயமரியாதையோடு இருக்க வேண்டும் என பாடம் எடுத்தார்கள். அதாவது இரு கட்சிகளுக்கும் நடுவே சண்டை மூட்டுகிறார்களாம்.

2. தனது புத்தாண்டு வாழ்த்தின்போது "திராவிட மாயையை அகற்றுவோம். சாதிய வேறுபாடுகளை களைந்து தமிழராய் ஒன்றுபடுவோம்" என்று சொல்லியிருந்தார் மருத்துவர் கிருஷ்ணசாமி.
"நீ படிக்கவே திராவிடம் தான் காரணம், பெரியார்தான் காரணம்" என்று அவரது பக்கத்தில் சென்று சண்டை போட்டார்கள் பெரியார் பக்தர்கள்.
அதாவது கிருஷ்ணசாமியும் அவர் சார்ந்த சமூகமும் தங்களது அரசியலுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்கிற ஆதிக்க மனப்பான்மை.

அப்புறம் ரொம்ப நாளா திராவிடத்தின் விளம்பர அரசியல் குறித்து சில சந்தேகங்கள் இருக்கின்றன.

1. திராவிடக் கட்சிகள் அனைத்திற்கும் தாங்கள்தான் தாய்க்கழகம் என உரிமை கொண்டாடும் திராவிடர் கழகம்
மாட்டுக்கறி விருந்து, தாலியகற்றும் நிகழ்வு ஆகிய அடையாளப் போராட்டங்களில் ஏன் திராவிடக் கட்சிகளை அழைப்பதில்லை?
மாறாக விசிக, ஆதித்தமிழர் போன்ற கட்சிகளை ஏன் அழைக்கிறார்கள்?

2. திமுக மேடைகளில் சுப.வீ, கி.வீரமணி ஆகியோர் பேசும்போது ஏன் மாட்டுக்கறி, தாலியகற்றுதல் ஆகியவை பற்றி பேசுவதில்லை?

அதாவது ஆதித்தமிழன் இருக்கும் கட்சிகளின்(விசிக, ஆதிதமிழர் போன்ற தலித் கட்சிகள்) மேடைகளில் முற்போக்கு பேசுவது,
சாதித் தமிழன் இருக்கும் கட்சிகளின்(திராவிடக் கட்சிகள்) மேடைகளில் வெறும் ஓட்டு பொறுக்குவது,
இதைதான் செய்து கொண்டிருக்கிறார்கள் திராவிடத்தின் பெயரால்.
முற்போக்கும் ஆச்சு, பணமும் சம்பாதித்த மாதிரி ஆச்சு.

அதனால்தான் தமிழகத்தில் சாதி ஒழிப்பு என்பது கானல் நீராகவே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக