வெள்ளி, 8 டிசம்பர், 2017

அய்யா வழி வேறு, இந்து மதம் வேறு

பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என வருணாசிரமம் படி மனிதரை நால்வகையாய் கூறுபோட்டது இந்து மதம்.
"அய்யா வழி மக்கள்" என்று ஒருமைப்படுத்தி அன்பை மட்டுமே போதித்தது அய்யா வழி.

சாணார்(நாடார்) உள்ளிட்ட பதினெட்டு சாதியினர் இடுப்பில்தான் துண்டைக் கட்ட வேண்டும் என்று நிர்ப்பந்தித்தது பிராமண இந்து மதம்.
துண்டை எடுத்து சுயமரியாதையுடன் தலையில் கட்டி விட்டது அய்யா வழி.

மேல்சாதி, கீழ்சாதி என பிரித்து வைத்து மனுதர்மம் காத்தது இந்து மதம்.
“தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்” என்கிறது அய்யா வழி.
அனைவரும் சமபந்தியில் அமரவைத்து, உணவளித்து உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டியது அய்யா வழி.

குறிப்பிட்ட சில சாதிகள் மட்டுமே கோவில் கருவறைக்குள் செல்ல அனுமதிப்பது இந்து மதம்.
அனைத்து சாதியினரும் நிழல்தாங்களுக்குள் செல்ல அனுமதிப்பது அய்யா வழி.

இதிகாச கற்பனைத் தெய்வங்களை வணங்க சொன்னது இந்துமதம்.
"உனக்குள் இருக்கும் உன்னை உணர்" என்று வலியுறுத்தும் விதமாக கண்ணாடியை நிழல்தாங்களுக்குள் வைத்து வணங்க சொன்னது அய்யா வழி.

பில்லி, சூனியம், மந்திரம், யாகம்,  உள்ளிட்ட  மூடநம்பிக்கைகளை  ஊக்குவிப்பது  இந்துமதம்.
அனைத்து மூடநம்பிக்கைகளையும் கடலில் தூக்கி வீசுங்கள் என கூறியவர் ஐயா வைகுண்டர்.

பெண்களைத் தீட்டு என்று கூறி கோவிலுக்குள் விட மறுத்தது இந்து மதம்.
பெண்களையும் அய்யா வழிப் பதிகளில் அனுமதித்து பாலின சமத்துவம் அளித்தது அய்யா வழி.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய  இந்துமத, பிராமண, உயர்சாதிக் கொடுமைகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற புரட்சி செய்தவர் ஐயா வைகுண்டர்.
அவர் போதித்த அகிலத்திரட்டும், இந்துமத பகவத் கீதையும் ஒன்றல்ல.
வைகுண்டர் வழிவந்தவர்கள் இன்று இந்து மதத்தின் பிடியில் சிக்கித் தவிப்பது காலத்தின் கொடுமை.

புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறி விழுங்கிய இந்துமதம் வைகுண்டரையும் அவ்வாறே விழுங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக