பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 ஜனவரி, 2015

பிகே(PK) - மதங்களுக்கு எதிரான பெரும் விவாதம்

ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவான பிகே படத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது.

ஏற்கனவே வந்துள்ள பல விமர்சனங்களின் அடிப்படையிலும், மதவாதிகளின் எதிர்ப்பையும் வைத்தே படம் மிகத் தரமானது என்று புரிந்து கொண்டேன்.


எனக்குப் பிடித்த சிலவற்றைப் பட்டியலிடுகிறேன்.

1. கதாநாயகியும் அவரது காதலனும் நெருங்கிப் பழகும் வேலையில், காதலன் பாகிஸ்தான் முஸ்லிம் என்று தெரிந்தவுடன் விலக முயற்சிக்கும் கதாநாயகி.
பாகிஸ்தானை எதிரியாகக் காட்டி போலி இந்திய தேசியம் வளர்க்கும் செயலைக் கேள்விக்குள்ளாக்கியது அந்தக் காட்சி.

2. எதற்கெடுத்தாலும் சாமியாரின் உததரவுக்காக காத்துக் கிடக்கும் கதாநாயகியின் தந்தை இறுதியில் சாமியாருக்கு எதிரான  நிலையில் வந்து நிற்பது அருமை.

3. பயம்தான் ஒரு மனிதனைக் கடவுளை நோக்கி போகச் செய்கிறது என்பதை நிரூபிக்க தேர்வுகாலத்தில் கல்லூரி வாயிலில் ஒரு கல்லை வைத்து அதனை வணங்கவைத்து, வணிகமாக்கும் யுக்தி.

4. கோவில் உண்டியல் பணம், கோவிலில் உருளுவது, பொய்களை சொல்லி மதம் மாற்றுவது, கத்தியால் உடம்பில் கீறல் போடுவது, மதத்தின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்துவது என பல பிற்போக்குத் தனங்களை நேரடியாக சாடியிருக்கிறார் இயக்குனர்.

5. கடவுளைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில்தான் ஏகப்பட்ட சண்டைகள், குண்டுவெடிப்புகள்.
யாரும் கடவுளைக் காப்பாற்ற வேண்டியதில்லை. அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வார் என்கிற வசனம்.

6. மதம் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப மறுக்கும் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குனர். அமீர்கானின் செயல்களை, பேச்சைப் பார்த்து அமீர்கானின் நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொள்வது.
மதவாதிகளின் அடாவடி, கருத்து சுதந்திரம் பற்றி இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

7. தன்னிடம் அமீர்கான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததால் 'அவன் முஸ்லிம், அவன் பேச்சை நம்பாதீர். அவன் இந்து மதத்தை அழிக்க முயற்சிக்கிறான்' என்று திசைதிருப்பும் (ஆ)சாமியார். மக்களைப் பிரித்தாளும் மதவாதிகளின் செயலை இதைவிடத் தெளிவாக காட்ட முடியாது.

8. குழந்தைகளைத் தூக்கிப் பார்த்து லேபிள் ஏதும் இருக்குதா என பார்க்கும் காட்சி. எந்தக் குழந்தையும் பிறக்கும்போது லேபிளோடு பிறப்பதில்லை என்கிற வசனம்.

9. கடவுள் நம் தந்தை என்கிறீர்கள்.
எந்தக் கடவுளாவது தான் குழுந்தைகளை தரையில் உருளச் செய்து வேண்டச் சொல்வானா? என்கிற வசனம்.

படம் முழுக்க மேலும் பல நல்ல காட்சிகள், வசனங்கள் உள்ளன. படத்தில் வரும் பல பகுத்தறிவுக் கேள்விகளை பெரியாரும், திராவிட கழகத்தினரும் பல வருடங்களுக்கு முன்னரே பிரச்சாரமாக எடுத்து செய்துவிட்டார்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.


அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். திருட்டு டிவிடி வாங்கியாவது பார்த்து விடுங்கள்.

சைவம், முண்டாசுப்பாட்டி மற்றும் சில தமிழ்ப்படங்களில் கிராமத்து சாமியார்கள், குறி பார்ப்பவர்களை அம்பலப்படுத்தியிருப்பார்கள். ஆனால் கார்ப்பரேட் சாமியார்களை நம்மாட்கள் நெருங்கியதில்லை. ஒரு கார்ப்பரேட் சாமியாரை பகிரங்க சவாலுக்கு அழைத்து அம்பலப்படுகிறான் பிகே.

ஆன்மீக நாட்டம் உள்ளவர்களையும் வெகுவாக ஈர்த்ததே பிகேவின் வெற்றி.
படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் மதம் மற்றும் கடவுளுக்கு எதிராக திரும்புவார்கள் என்று சொல்ல முடியாது.
ஆனால் நித்தி, ஜெயேந்திரன், ராம்பால், ராம்தேவ் போன்ற மத வியாபாரிகளுக்கு எதிராக திரும்புவார்கள்.
பிகே புண்படுத்துவது இவர்களின் மனதைதான், இந்துமதம் சார்த்தவர்களின் மனதை அல்ல.

படத்தில் இந்து மதத்தை மட்டும் அதிகம் விமர்சிக்கிறார்கள் என்று சிலர் சொல்வது உண்மைதான்.
அப்படியானால் என்ன பொருள்?
இந்து மதத்தில் அதிக பிற்போக்குத் தனங்களும் மூடநம்பிக்கைகளும் இருக்கின்றன என்றுதான் பொருள்.
அதனைத் திருத்திக்கொள்வதுதானே நல்ல செயல்!  விமர்சிக்கவே கூடாது என்பது வன்முறையே!!

தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட தமிழ் திரையுலகை சார்ந்தவர்கள் முன்வர வேண்டும்.
நாத்திகர்கள் கிராமம் கிராமமாக இந்தப் படத்தை போட்டுக் காட்டி தங்கள் பிரச்சாரத்தைத் தொடரலாம்.

"தமிழில் எப்போது ரீமேக் செய்வார்கள்?" என்பதே படம் முடிந்து வெளிவந்த பலரின் கேள்வியாக இருந்தது.
பொறுத்திருந்து பார்ப்போம்.

திங்கள், 27 அக்டோபர், 2014

சாதிக் கட்டமைப்பில் தீயை வைக்கும் பெண்கள்??

நேற்று நீயா நானா நிகழ்ச்சியில் 'தந்தை-மகள்' தலைப்பில் நவீன பெண்களும் தந்தைகளும் விவாதித்தார்கள்.
ஆரம்பத்தில் விவாதம் சற்று மந்தமாக போய்க் கொண்டிருந்தது.
வேறு வழியின்றி பார்த்துக் கொண்டிருந்தேன்.

இறுதிக் கட்டத்தில் நிகழ்ச்சி அருமையாக இருந்தது.

* பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் தங்கள் கருத்துக்களை அருமையாக முன்வைத்தனர்.

* ஆடைக் கலாச்சாரம் பற்றி விளாசினர்.
"என் ஆடை, என் உரிமை, நீ மூடிட்டு போ" என்பது போலத்தான் பலர் கருத்துக்கள் இருந்தன.
ஜேசுதாஸ் போன்றவர்களுக்கு செருப்படி போல விழுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

* 'நன்கு படித்த, சம்பாதிக்கிற, ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த பையனைத் திருமணம் செய்வீர்களா?' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
சற்றும் யோசிக்காமல் பல பெண்களும் 'ஆமாம்' என்று கையை உயர்த்தினர்.

பின்னர் அதே கேள்வி தந்தைகளிடம் வைக்கப்பட்டது.
தந்தைகளும் ஆமோதித்தனர்.

இந்தக் கேள்வியை முன்வைக்கும் முன்னரே ' என் அப்ப சாதியைப் பிடித்து தொங்குவார். அது எனக்கு சுத்தமாக பிடிக்காது' என்றார் ஒரு நவீனத் தமிழச்சி.
சபாஷ்!!

'அவ்வளவுதான்டா. தமிழகத்தில் சாதி ஒழிந்தது' என்று அறையில் உள்ள நண்பரிடம் மகிழ்ச்சியாக சொன்னேன்.

கடந்த வருடம் "சாதியை ஆதரிக்கும் பெண்கள் - சாதியை எதிர்க்கும் பெண்கள்" விவாதம் நடந்தது.
நிகழ்ச்சியின் முடிவில் சாதியை ஆதரிக்கும் பெண்கள்கூட சாதி எதிர்ப்பு நிலையில் வந்து பேசியது ஞாபகம் இருக்கிறது.



சாதிக் கட்டமைப்பு என்பது வேண்டாத ஒன்றாக இன்னும் இந்த சமூகத்தில் கிடைக்கிறது.
சாதியைப் பயன்படுத்தி வயிறு வளர்க்கும் கூட்டமும், போலிக் கவுரவம் (சாதி கவுரவம் அல்ல, இழுக்கு) பார்க்கும் நபர்களும்தான் அதனைப் பிடித்து தொங்குகிறார்கள்.

உழைக்கும் மக்கள் தங்களை தொடர்ந்து அப்டேட் செய்து கொள்கிறார்கள். சாதியை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அதுதான் நேற்றைய நிகழ்ச்சியில் கற்றுக் கொண்டது.

முற்போக்கு கொள்கைகளை எவ்வளவுதான் ஆண்கள் பேசினாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு அதிகம் அவசியம்.
சாதிக் கட்டமைப்பில் தீயை வைக்கும் பெண்களுக்கு வாழ்த்துககள்.

சாதி சங்கங்கள் பெருகி சாதியைக் காக்க முயன்று கொண்டிற்க்கும் இந்தக் காலக்கட்டத்தில், இம்மாதிரியான நவீனப் பெண்கள் மறுபுறத்தில் சாதிக் கட்டமைப்பில் பிளவை ஏற்படுத்திக் கொண்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று.

"டெல்லி வேற நாகரிகம் (Modernism). அது உடையை மையப்படுத்தியது.
ஆனால் தமிழ்நாடு அப்படியல்ல, அது கருத்து சிந்தனையை மையப்படுத்திய நாகரிகம்(Modernism).
பெரியார் ஒரு Modernist, பாரதி ஒரு  Modernist" என்று முடிவுரை வழங்கினார் கோபிநாத்.

நேற்றைய நிகழ்ச்சி குறித்து மேலும் எழுதியுள்ளார் ஒரு நண்பர்.


யூடியூப் தளத்தில் வீடியோ வெளியாகியுள்ளது. பார்க்காதவர்கள் பார்க்கவும்.