ஞாயிறு, 30 டிசம்பர், 2012

பான் கி மூன் என்னும் சீனப் பிரதிநிதி

பான் கி மூன்
யார் இவர்?
பலரும் சொல்வது: ஐக்கிய நாட்டு சபையின் பொதுச்செயலாளர்.
ஆனால்  இவரது செயல்பாடுகளை உற்றுநோக்கினால் இவர் சீனாவின் பிரதிநிதியா என்னும் சந்தேகம் கண்டிப்பாக எழும்.

இலங்கையில் இனப் படுகொலையை தடுக்க ஐ.நா. தவறிவிட்டது என்று ஐ.நாவின் முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையிலான விசாரணைக் குழு குற்றம் சாட்டியது.

இறுதிப் போரில் ஈழத் தமிழரைக் காப்பாற்ற தவறிவிட்டோம் என ஐ.நா. செயலர் பான் கி மூன் ஒத்துக்கொண்டார்.

அப்படியானால் எம் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன என்பதில் ஐ.நா சபை இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை. கொலையாளியான இலங்கையிடம் விசாரணைப் பொறுப்பைக் கொடுத்து தமிழர்களுக்கு அநீதி இழைக்கிறது.

இனப்படுகொலைக்கு முன்னும் பின்னும் இலங்கை-சீனாவின் நட்பு மிகப் பலமாக உள்ளது. உலகின் பல வல்லரசு நாடுகளும் ஐ.நா வுக்கு பணியும்போது இலங்கை ஏன் பணியவில்லை? அதன் பின்னணி என்ன? கண்டிப்பாக சீனா கொடுக்கும் பெரும் ஆதரவுதான்.

இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகமாகி விட்டது.
தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு இந்த நேரத்தில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் எந்த சக்தி அதை தடுத்து நிறுத்துகிறது? கண்டிப்பாக பான் கி மூன் என்னும் சீனப் பிரதிநிதி தான்.

விஜய் நம்பியார், ஜேம்ஸ் ஹோல்ம்ஸ், பான் கி மூன் ஆகிய ஐ.நா அதிகாரிகளும் இனப்படுகொலைக்கு துணை போனவர்கள். தங்களின் குற்றம் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக பொது வாக்கெடுப்பு பற்றி இவர்கள் வாய் திறப்பதே இல்லை.

மாவீரன் முத்துகுமார் தனது  பதினான்கு அம்சக் கோரிக்கைகளில் இரண்டாம் கோரிக்கையாக எழுதியது:

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

December 30, 2012:
டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் மரணத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீமூன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

டெல்லி மாணவிக்காக பான்கீமூன் வருந்துவது  ஊரை ஏமாற்றும் நாடகம். தமிழீழத்தில் சிங்களக் காடையர்களால் எம் தமிழ்ச்சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்களே! அதை வேடிக்கை பார்த்துவிட்டு, அதை மறைக்க முயற்சி செய்யும் பான்கீமூன் டெல்லி பெண்ணுக்காக வருந்துவது நகைச்சுவை!

பான்கீமூன்  பற்றி முத்துகுமார் அப்பவே சொல்லி விட்டார். நாம்தான் தாமதமாகப் புரிந்து கொண்டோம். ஐ.நா வாசலில் காத்துக் கிடந்தால் நீதி கிடைக்காது. ஐ.நா-வின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

தமிழர்கள் இந்தப் பணியை விரைந்து செய்ய வேண்டும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக