நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் சென்னை - கர்நாடக அணிகள் மோதிய அரையிறுதியில் டாஸ் போட்ட பின்னர் கன்னட நடிகர் சுதீப் அவர்கள் பேசினார். தன் தாய்மொழியான கன்னடத்தில் பேசிக் கொண்டே இருந்தார்.
குறுக்கிட்ட கேள்வியாளர் 'சார், ஆங்கிலத்தில் பேசலாமே! என்றார்.
"என் ஊரு, என் மக்கள், கன்னடத்தில் பேசினால்தான் நல்லா இருக்கும்" என்றார்.
பின்னர் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் பேசி முடித்துக் கொண்டார்.
ஜெயா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பத்திரிகை நிருபர்களிடம் வாசிக்க வந்த வழக்கறிஞர் 'முதலில் கன்னடம், பின்னர் ஆங்கிலம்' என்று கூறி கன்னட பத்திரிகைகளுக்கு முதலில் பேட்டிக் கொடுத்தார்.
சென்னையில் உள்ள ஆந்திரா உணவகங்களில் போர்டு, பில், புகைப்படங்கள், வாசகங்கள் என அனைத்தும் அவர்களின் தாய்மொழியான தெலுங்கில் இருக்கிறது.
மலையாளிகள் பற்றி சொல்லவே தேவையில்லை.
ஹைதராபாத்தில் உள்ள மலையாள உணவகங்களுக்கு சென்றால் ஏதோ கேரள வரலாற்றுக் கண்காட்சிக்கு சென்றது போல இருக்கும். மெனு கார்டு, புகைப்படங்கள் என அனைத்திலும் மலையாளப் பண்பாடு தூக்கலாக இருக்கும்.
மேலே உள்ளவர்களின் தாய்மொழிப் பற்றைப் பாராட்டுகிறோம்.
தமிழனின் நிலை என்ன?
காதல் தொடர்பான நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியில் பரிசு வென்ற சகோதரி என்ன மொழியில் பேசினார்? என்ன பேசினார்? என்றே தெரியவில்லை.
தமிழர்களின் பெரும்பாலும் பார்க்கும் நிகழ்ச்சியில் தமிழில் பேசினால்தானே நம் கருத்துக்கள் பல மக்களையும் சென்றடையும் என்கிற பொது அறிவு கூட அந்த சகோதரிக்கு தெரியாமல் போனது.
தமிழில் பேசும்போது ஆங்கில வார்த்தைகள் தற்செயலாக குறுக்கே வருவது வேறு.
ஆனால் வேணுமென்றே ஆங்கிலத்தை இழுத்து திணிப்பது வேறு.
"கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்,
தமிழ் கத்துக்க ட்ரை பண்ணுறேன்" என வெளிமாநில சகோதர, சகோதரிகள் தமிழ் நோக்கி நகருகிறார்கள்.
ஆனால் தமிழனோ ஆங்கிலம் நோக்கி நகருகிறான்.
தமிழ் சோறு போடுமா? தமிழ் தமிழ்னு என் சாகுறீங்க? என்று சோற்றைப் பற்றி மட்டுமே யோசிக்கும் பாரத மாதாவின் பக்தர்கள் கேட்கிறார்கள். ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை வரவேற்கும் மூடர்கள் இவர்கள். அடுத்தவன் மொழிக்கு பல்லக்கு தூக்கும் அடிமைகள் இவர்கள்.
தமிழில் சாதி இருக்குது (உப்பு இருக்கு, காரம் இல்லை என்றும் சொல்லுவாங்க), தமிழை மட்டும் வைத்து என்ன செய்ய? என தமிழகத்திலும் சில வெங்காயங்கள் கிளம்பியிருக்குது.
இந்த மூடர்களின் பேச்சுக்களை புறந்தள்ளுவீர்.
மொழி அழிந்தால் இனம் அழியும்.
தமிழை வாழ வைப்போம்!
தமிழனிடத்தில் தமிழில் பேசுவோம்.
Provisional store என்பதை 'ப்ரொவிஷனல் ஸ்டோர்' என எழுதி போர்டு வைத்தால் தமிழ் வாழாது.
மளிகைக் கடை என்று எழுதினால்தான் தமிழ் வாழும்.