மாணவர் புரட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாணவர் புரட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 மார்ச், 2013

தமிழக மாணவர்கள் பார்வைக்கு.

ஈழத்துக்காக இனி நாம் செய்ய வேண்டியது என்ன?
அன்பார்ந்த மாணவத் தோழர்களே! வணக்கம்.
தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றீர்கள். போராட்டத்தின் முதற்கட்டம் முடிந்து அடுத்த கட்டம் குறித்து சிந்தித்துக் கலந்தாய்வு செய்து வரும் உங்கள் பார்வைக்குச் சில முன்மொழிவுகளை அன்புரிமையோடு படைக்கிறோம்.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சென்ற 2012 மார்ச்சில் அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டுவந்த போதே, இது தமிழர்களுக்கு எதிரான தீர்மானம், இனக்கொலைக் குற்றவாளிகளான சிங்கள இராசபட்சே கும்பல் தப்ப்பித்துக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கும் தீர்மானம் என்று எமது இயக்கத்தின் சார்பில் எச்சரித்தோம். எங்கள் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், தமிழகத்தின் அரசியல் கட்சிகளும், சிலபல ஈழ ஆதரவு அமைப்புகளும் கூட அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று சேர்ந்திசை பாடின.
இந்த முறை மாணவர்களாகிய நீங்கள் சில அரசியல் தலைவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல், உள்ளது உள்ளபடி அமெரிக்கத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தையும் உண்மை நோக்கத்தையும் சரியாக எடுத்துக் காட்டிப் போராடியதால் தமிழினம் விழித்துக் கொண்டது.
இனக்கொலையை இனக்கொலை என்றுதான் சொல்ல வேண்டும். அதை மறைக்க மனித உரிமை மீறல் போன்ற சொற்களை யார் பயன்படுத்தினாலும் ஏற்க மாட்டோம், ஏமாற மாட்டோம். டப்ளின் தீர்ப்பாயம், ஐநா மூவல்லுநர் குழு அறிக்கை, இலண்டன் சேனல் - 4 வெளியிட்ட ஆவணப் படங்கள்... இவற்றை எல்லாம் மூடிமறைத்து விட்டு இராசபட்சேவின் செல்லப்பிள்ளையான படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் (LLRC) அறிக்கையை வலியுறுத்துவதும், ஆதரவு எதிர்ப்பு என்று சிணுங்குவதும் உலகின் கண்ணில் மண்ணைத் தூவும் வேலை என்பதை உரக்கச் சொல்வோம்.
உலகத் தமிழர்களின் கோரிக்கைகளும் நம் கோரிக்கைகளும் ஒன்றே:
  1. இராசபட்சேவின் சிங்கள அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு இழைத்த இனக் கொலை குறித்து தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு (Independent International Investigation) தேவை.
  2. ஈழ மக்கள் மீது தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் இனக்கொலையைத் தடுத்து நிறுத்தப் பன்னாட்டுப் பாதுகாப்புப் பொறியமைவு (International Protective Mechanism) தேவை.
  3. தமிழீழத்தின் இறைமையை (sovereignty) மீட்டெடுக்கும் வகையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வரும் ஈழத் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு தேவை.
இந்தக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தை ஐநா மனித உரிமை மன்றத்தை மையப்படுத்தி நடத்தினோம். இனி என்ன செய்வது? மனித உரிமை மன்றம் அடுத்த முறை கூடட்டும் என்று நாம் காத்திருக்க முடியாது. இராசபட்சே கும்பலை மென்மேலும் தனிமைப்படுத்துவதன் மூலம் தமிழீழ மக்கள் போராடுவதற்கான வெளியை உருவாக்கி விரிவாக்குவதுதான் நம் போராட்டத்தின் நோக்கமும் விளைவும் என்பதை மறந்து விடக் கூடாது. உலக அரங்கில் என்றாலும் உள்நாட்டில் என்றாலும் இந்த விளைவை நோக்கியே நம் போராட்டங்கள் அமைய வேண்டும்.
இனக்கொலைக் குற்றம் புரிந்த சிங்கள அரசை அனைத்து நாடுகளும் அனைத்து மக்களும் புறக்கணிக்கும் படி செய்வோம். பொருளியல், அரசியல், பண்பாடு, கலைத்துறை, விளையாட்டு, சுற்றுலா... என்று எந்தத் துறையையும் விட்டு வைக்காமல் சிங்களத்தைப் புறக்கணிக்கும் இயக்கத்தை வீரியத்துடன் முன்னெடுத்துச் செல்வோம்.
  • காமன்வெல்த் மாநாடு கொழும்பில் நடத்தக் கூடாது. நடந்தால் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது.
  • இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சிங்களர் எவரும் விளையாடக் கூடாது.
  • தமிழகத் திரைத் துறையினர் படப்பிடிப்பு நடத்தக் கூடாது.
  • கலைஞர்கள், எழுத்தாளர்கள் இலங்கையில் நடைபெறும் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளக் கூடாது.
  • இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவை இயற்றிய தீர்மானத்திற்கு தமிழக அரசும் இந்திய அரசும் செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.
  • தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடலடிக் கம்பி வழியாக மின்சாரம் அனுப்பும் இந்திய-இலங்கை மின் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நீக்கம் செய்ய வேண்டும்.
  • இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்று தமிழக சட்டப் பேரவையில் போலவே இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்ற வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக அனைத்து மாணவர்களையும், அனைத்துப் பொதுமக்களையும், அனைத்து இயக்கங்களையும், அனைத்து ஆதரவாளர்களையும் திரட்டுவதற்குப் பொருத்தமான போராட்ட வடிவங்களை நீங்களே முடிவு செய்யுங்கள்.
அதேபோது நம் கோரிக்கைகள் அனைத்திற்கும் மையமாக இருக்க வேண்டிய முழக்கம்:
இலங்கையைப் புறக்கணிப்போம்!
BOYCOTT SRILANKA!
உலகெங்கும் ஒலிக்கும் இந்த முழக்கம் தமிழகத்திலும் ஓங்கி ஒலிக்கட்டும். இது இனக் கொலைகாரர்களின் இந்தியக் கூட்டாளிகளை அம்பலப்படுத்தும். இன்னமும் குழம்பிக் கிடக்கும் தமிழர்களின் தடுமாற்றத்தைப் போக்கவும் துணை செய்யும்.
இலங்கையைப் புறக்கணிப்போம்!
BOYCOTT SRILANKA!
வெல்க மாணவர் போராட்டம்!
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
பொதுச் செயலாளர்: தோழர் தியாகு
தொடர்புக்கு: o44-23610603, 98651 07107, 9715417170




சனி, 23 மார்ச், 2013

இதைக் கூட இந்தியாவால் செய்யமுடியாதா??


தமிழீழ விடுதலைக்காக தமிழகத்தில் மாணவர்கள் தன்னெழுச்சி போராட்டம் ஆரம்பித்து பொதுமக்கள், பணியாளர்கள் போராட்டம் என நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது.

ஆனால் இந்தியா அதே கள்ள மௌனம் சாதிக்கிறது. நடந்தது இனப்படுகொலை என்பதைக் கூட இந்தியாவால் தைரியமாக சொல்ல முடியவில்லை (இந்தியாவும் உடந்தைதானே!!). இந்தியா மீது தமிழர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். காங்கிரஸ், பிஜேபி மற்றும் பல இந்தியக் கட்சிகளும் தமிழர்கள் பற்றிக் கண்டுகொள்வதில்லை. தமிழகக் கட்சிகளும் கூட்டணி கணக்கில் இறங்கிவிட்டார்கள்.

 இந்நிலையில் இந்தியாவுக்கு கீழ்க்காணும் கோரிக்கைகளை வைக்கிறேன்.
இது ஏற்கனவே பலரும் வைத்ததுதான்.

1. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது. (புறக்கணிக்கப்போவதாக கனடா ஏற்கனவே அறிவித்துவிட்டது)

2. IPL கிரிக்கெட் விளையாட்டில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ளக் கூடாது.

3. தமிழ்மண்ணிலிருந்து இலங்கைத் தூதரகம் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

4.  இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்  (ஏற்கனவே தமிழக அரசு விதித்துவிட்டது)

5. தமிழக மீனவர் மீதான தாக்குதல்களுக்காக இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும். இனி தாக்குதல்கள் நடைபெறாது என்பதை உறுதி செய்யவேண்டும்..

Demands to Indian Government

1.India should not attend common wealth meeting to be held in genocidal srilanka.  (Canada already announced that they wont attend that meeting)


2. Srilankan players should not be allowed to play in IPL matches.

3. Genocidal Srilankan embassy should be removed from Tamilnadu

4. Indian Government should impose economical ban on Srilanka (Tamilnadu Govt already imposed economical ban on srilanka)

5. India should condemn Srilanka for its attacks on Tamilnadu fishermen.


நான்காவது கோரிக்கை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் மிக எளிதாக நிறைவேற்றப்படக்கூடிய  கோரிக்கைகளே!!

கிரிக்கெட்டை ஏன் புறக்கணிக்க வேண்டும் எனப் பலர் கேள்வி கேட்கக் கூடும்.
அவர்கள் இந்தப் பதிவை படித்துத் தெளிவாகுங்கள்.

இதைக் கூட இந்தியாவால் செய்யமுடியாதா??

புதன், 13 மார்ச், 2013

உருப்படாத முட்டாள் கூட்டம்

தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.

தனி ஈழம், சர்வதேச விசாரணை, பொது வாக்கெடுப்பு என உயர்ந்த குறிக்கோள்களுடன் மாணவ சமுதாயம் களத்தில் இறங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி.


இதில் விசேஷம் என்னவென்றால் இதுவரை எந்தவொரு இந்திய ஊடகங்களும் மாணவர்களின் இப்போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. இதுவும் மகிழ்ச்சியே! இந்திய ஊடகங்கள் ஏன் தமிழ்நாட்டு விசயத்தில் அக்கறை செலுத்த வேண்டும்?

தமிழ்நாட்டு ஊடகங்களும் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கவில்லை. செய்திகளை இருட்டடிப்பு செய்கிறார்கள். திரித்து வெளியிடுகிறார்கள்.

தமிழக அரசு பற்றி சொல்லவே தேவையில்லை. போராட்டத்தை அடக்க பாசிச செயல்களில் ஈடுபடுகிறது. (ஆத்தா! கருணாவை மேடையெல்லாம் காரித் துப்புகிறீர்களே! கடிதத்தை தவிர நீங்கள் கிழித்தது  என்ன? )

ஆனாலும் மாணவர்களின் போராட்டம் விரிவடைகிறது. இதற்கு இணையங்கள் பெரும் பக்கபலம்.

விசயத்துக்கு வருவோம்.
பல இணையங்களில் சில அதிமேதாவிகள் நஞ்சைக் கக்குகின்றன. இந்த அதிமேதாவிகள் தமிழர்கள்தானா? அல்லது சிங்களர்களா என்னும் சந்தேகமும் எழுந்துள்ளது. 
எழுத்து வழக்கைப் பார்க்கும்போது நம்ம தமிழ்நாட்டில் உள்ள அதிமேதாவிகள்தான் என்று கருதுகிறேன்.

================================================================
அவர்கள் கக்கிய நஞ்சுகள் கீழே:

"இவர்கள் எல்லாம் நேற்று பிறந்து இன்று மாணவர்கள் ஆனவர்களா? இலங்கையில் இறுதிகட்ட போர் நடந்தபொலுதும் இவர்கள் மாணவர்களாக இருந்தவர்கள்தானே அப்போது போராட வேண்டியதுதானே. இன்று எங்கிருந்து இந்த திடீர் ஞானோதயம்."

அட கண்ணுங்களா.... பரிட்சை நெருங்குகிறது.... உங்க அப்பன் , ஆத்தா , கஷ்டப்பட்டு சம்பாதித்து, கல்லூரிக்கு அனுப்பினா, கேட்பார் பேச்ச கேட்டுட்டு இப்படி ஹாயா உண்ணாவிரதம் இருந்தா எப்படி? உங்களுக்கு உண்மையிலேயே இனஉணர்வு அல்லது, பச்சாதாபம் இருந்தா 4 வருடத்துக்கு முன்னால் அல்லவா போராடியிருக்க வேண்டும்...  

 இது போன்ற போராட்டங்களால் ஒரு விளைவும் ஏற்படாது..இவர்களுக்கு தெளிவான கோட்பாடுகள் இல்லாமல் உண்ணாவிரதம் இருப்பது யார் துண்டுதல் பெயரில்..  
 
முதல படிக்குற வழிய பாருங்க.. இந்த அரசியல்வதீங்க கூட சேராதீங்க  
நிறைவேற முடியாத ஒரு கோரிக்கை . இதற்கு ஒரு போராட்டம் தேவையா ? என்று சிந்திக்க வேண்டும். முடிவு எடுக்க வேண்டயது இலங்கை இந்தயாவில் போராடி என்ன பயன். படிப்பு வீனா போக நல்ல வழி.


தூண்டிவிட்ட சீமான் வைகோ நெடுமாறன் உதயகுமார் போன்றவர்களை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச்சொல்லுங்கள். அதுவே மாணவர்களாகிய நீங்கள் தமிழ் நாட்டுக்கு செய்யக்கூடிய அளப்பெரிய சேவையாகும்.

தமிழீழம் அமைவது இருக்கட்டும்.... முதலில உங்கள் தமிழ் நாட்டில இருக்கிற பிரச்சனைகளை தீர்க்க போராட்டம் நடத்துங்க...
 ===============================================================
இதுபோன்று பல நச்சுக்கருத்துகளை பரப்பி போராட்டத்தை மழுங்கடிக்கவே கிளம்பியிருக்கிறது ஒரு கூட்டம். இந்தப் போராட்டம் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த போராட்டம் நடந்தாலும் அதை விமர்சிப்பதற்காக இப்படி  உருப்படாத முட்டாள் கூட்டம் கிளம்புகிறது.
ஒருசிலர் வெளிநாட்டில் இருந்துகொண்டு இங்கே தமிழன் நடுத்துற போராட்டத்தை அவமதிக்கிறார்கள்.

ஒருநாலாச்சும் போராட்டக் களத்திற்கு வருவார்களா? வரவேமாட்டார்கள். வராமல் இருந்தாலும் சரி, ஏன் தேவையற்றக் கருத்துக்களைப் பரப்ப வேண்டும்?? ஒரு கம்யுட்டரும் இணைய இணைப்பும்  வைத்துக் கொண்டு தங்கள் இஷ்டத்துக்கு நச்சுக்கருத்துகளை பரப்புவதில் இந்தக் கூட்டத்திற்கு அப்படி என்ன ஆனந்தம்??

இந்தக் கூட்டத்திற்கு சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்.
இது இனத்திற்காக இனம் நடத்தும் போராட்டம்.
களத்திற்கு வா.
இல்லையேல் களத்திற்கு வந்தவர்களை ஆதரி.
பிடிக்கவில்லையென்றால் வந்து எதிர்ப்போராட்டம் நடத்து.
அதைவிட்டு தேவையில்லாமல்  நச்சுக்கருத்துகளை பரப்பாதே!
போராட்டத்தை மழுங்கடிக்கப் பார்க்காதே!!

"போராடாதவன் ஜடம்"- தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் 
           

திங்கள், 11 மார்ச், 2013

வியக்க வைக்கும் மாணவர்கள்

வெகுநாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் மாணவ சக்தி ஒன்றுபட்டு எழுந்துள்ளது. தலைநகரில் லயோலா கல்லூரி மாணவர்கள் ஆரம்பித்து வைத்த போராட்டம் தமிழகத்தின் பல இடங்களிலும் எழுச்சி பெற்று நடைபெறுகிறது.

இம்முறை மாணவர்கள் வெறும் உணர்வுடன் மட்டும் எழுச்சி கொள்ளவில்லை. தமிழீழம் தொடர்பான மாபெரும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கொள்கைகளுடன் களத்தில் உள்ளனர்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள 9 கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைக்கிறார்கள்.
மிகவும் முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ள கோரிக்கைகள்


இது மட்டுமில்லாமல் பல இடங்களில் தமிழர் விரோத சகுனி சு.சாமியின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டுள்ளதிலிருந்து மாணவர்களின் தெளிவானப் பார்வை புரிகிறது.

ஜனநாயகப்  போராட்டத்தை பாசிச முறையில் அடக்க நினைத்து போராட்டத்தை தமிழகத்தின் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்ற தமிழக பாசிச அரசுக்கு நன்றிகள் பல.

அனைத்து மாணவர்களுக்கும் எனது சிறிய வேண்டுகோள்:

போராட்டத்தில் அரசியல், வன்முறை கலந்திடாதவாறு  கவனமாக செயல்படுங்கள்.

தமிழீழம் தொடர்பான கோரிக்கைகளை பொதுமக்களிடம் முறையாக் கொண்டு சேருங்கள்.

களத்தில் சந்திப்போம்.