திங்கள், 21 ஜனவரி, 2013

2014-இல் பிரதமராகும் ராகுல்காந்தி

தலைப்பை பார்த்ததும் சிலர் அதிர்ச்சி அடையலாம். இதெல்லாம் நடக்குற காரியமா?  என எண்ணலாம். ஆனால் இது நடந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

ஊழல், விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல்  விலை உயர்வு  மற்றும் பல  குற்றச்சாட்டுகளால்  மத்திய காங்கிரஸ் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

'அவ்வளவுதான், இனி காங்கிரஸ் வரவே வராது' என பலரும் நிம்மதி பெருமூச்சு விடலாம். மோடி வரட்டும் என இணையங்களில் பலர் விவரம் தெரியாமல் வீரவசனம் பேசலாம் [வீரவசனம் பேசியவர்களில் நானும் ஒருவன் :)].

ஆனால் அனைத்தையும் தாண்டி  2014-இல் காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். சோனியாவின் தவப்புதல்வர்  ராகுல்காந்தி பிரதமராக ஆட்சிக் கட்டிலில் அமருவார்.

 எப்படி சாத்தியமாகும்? 
  • மக்களின் மறதி. இறுதி நேரத்தில் கொடுக்கப்படும் போலி வாக்குறுதிகள் பழைய நிகழ்வுகளை மக்கள் மறந்து விட செய்துவிடும்.
  • சரியான எதிர்க்கட்சி இல்லாமை. பிரதான எதிர்க்கட்சியான பி.ஜே.பி யின் தலைவரை ஒரு மதவாத அமைப்பு தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. (இவர்கள் ஆட்சிக்கு வந்து என்னத்த கிழிக்க??). மூன்றாவது அணி இந்தியாவில்  எக்காலத்திலும் சாத்தியம் கிடையாது
  • காங்கிரசுக்காக பணம் வாரியிறைக்க தயாராக உள்ள  தொழிலதிபர்கள்
  • தம் மாநிலங்களில் செத்துப்போன காங்கிரஸ் பிணத்தை சுமக்க தயாராக உள்ள மாநிலக்கட்சிகள். தங்கள் சுயநலத்திற்காக, பதவிகளுக்காக இந்த மாநிலக்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
  • சோனியா மற்றும் சில காங்கிரஸ் தலைவர்களின்  ராஜதந்திரம். நம்ம ஊரு கருணாநிதியை அரசியல் சாணக்கியர் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சாணக்கியரையே அலறவிட்டவர்கள் இவர்கள்.  தேர்தல் வியூகம்(??) வகுப்பதில் காங்கிரஸ்காரர்கள் கில்லாடிகள்.

ஆக கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து பார்த்தால்  2014-இல் பிரதமராவார் ராகுல்காந்தி. இது எனது சிறு கணிப்பு. உங்கள் கணிப்புகளையும் பதிவு செய்யலாம்.

[பின் குறிப்பு: இந்தியாவை யார்  ஆண்டாலும் தமிழர்களுக்கு ஒரு நன்மையையும் கிடையாது. அதனால் இந்தியாவை  ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கு கவலை இல்லை.]

வெள்ளி, 18 ஜனவரி, 2013

இதுதான்டா தமிழ்த் தேசியம்!!

 இணையதளத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது தமிழ்த் தேசியம் தொடர்பாக தோழர் க.அருணபாரதியின் அருமையான கருத்துக்கள் கண்ணில் தென்பட்டன .
 அவை இதோ:
 தமிழ்நாட்டு முதல்வர் பதவியில், “மானத்தமிழன்” அமர்ந்தாலும், மார்வாடி அமர்ந்தாலும் அதன் விளைவாக தமிழ் இனத்திற்கு ஏதும் கிடைக்கப் போவதில்லை. 
 தமிழீழச் சொந்தங்களை அழித்தொழிக்கும் இலங்கைப் போரை நிறுத்த வேண்டுமென கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரும் தீர்மானம், இலங்கை மீது பொருளியல் தடை கோரும் தீர்மானம் என ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு இந்திய அரசின் குப்பைத் தொட்டிக்குள் விழுந்த தீர்மானங்களைப் போல, அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து வெறும் தீர்மானங்கள் மட்டுமே போடுவதைத்தான் தமிழக சட்டமன்றம் செய்ய முடியுமே தவிர, ஒருக்காலும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அரசியல் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.
சிங்கள ஆதிக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொள்ள வேண்டுமென தமிழீழ மக்களைத் திரட்ட, தமிழீழத் தமிழர்களால் வழங்கப்படுகின்ற கருத்தியலே, அவர்களால் ‘தமிழ்த் தேசியம்’ என முன்வைக்கப்படுகிறது. அதே போல், இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக உள்ள தமிழ்நாடு தம்மை விடுவித்துக் கொண்டு தனித் தமிழ்த் தேசமாக மலர வேண்டும் என்பதே தமிழகத்தில் ‘தமிழ்த் தேசியம்’ ஆக இருக்க முடியும்.
ஆனால், இந்திய அரசியலமைப்பையும், இறையாண்மையையும் ஏற்றுக் கொண்டு நடைபெறும் தேர்தல்களில் பங்கேற்பதும், தமிழ் இனத்தை இந்திய அரசுக்குக் காட்டிக் கொடுக்கும் மசோதா மன்றமாகத் திகழும் தமிழக சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவதும் தான் ‘தமிழ்த் தேசியம்’ என நாம் தமிழர் கட்சி, தமிழர் களம், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சியினர் பேசுகின்றனர்.
தேர்தல் அரசியல் மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியம் என்ன இடஒதுக்கீடு போன்ற சீர்திருத்தக் கொள்கையா என்று கூட இவர்கள் சிந்திப்பதில்லை.
 ‘அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ எனப் பேசி தேர்தல்களில் பங்கேற்று மக்களை ஏய்த்த தி.மு.க.வின் வழித்தோன்றல்களாகவே இவர்கள் மக்களிடம் தென்படுவார்கள். ம.தி.மு.க., பா.ம.க., கொ.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சி, தமிழர் களம் என எத்துணை அமைப்புகள் வந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல.
தேர்தல்களில் வெற்றி பெற்று பதவிகள் பெறலாம், தமிழ்ச் சமூகத்திற்கு சில கூடுதல் உரிமைகளைக் கூடப் பெற்றுத் தரலாம் என்றாலும், ஒருபோதும் தமிழ்த் தேசிய விடுதலையைப் பெற்றுத் தர முடியாது. 
ஏனெனில், தமிழ்த் தேசியம் என்பது நாம் கேட்டுப் பெற வேண்டிய சலுகையல்ல; அது ஒர் தேசிய இனத்தின் விடுதலை இலக்கு. அதனை மக்கள் எழுச்சிப் போராட்டங்களே பெற்றுத் தரும், அதில் தேர்தல் கட்சிகளுக்கு இடமில்லை.
 
(கட்டுரையாளர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

வியாழன், 17 ஜனவரி, 2013

மூன்றாகப் பிரியும் ஆந்திரா மாநிலம்

ஆந்திரா மாநிலம் என்பது மூன்று பகுதிகளை உள்ளடக்கியது.
தெலங்கானா 
ராயலசீமா 
ஆந்திரா (கடற்கரை பகுதி)

இவற்றில் ராயலசீமா, ஆந்திரா (கடற்கரை பகுதி) ஆகியவை சென்னை மாகாணத்தில் உள்ளடங்கி இருந்த பகுதிகள். மொழிவாரிப் பிரிவினைக்குப் பிறகு  சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டவை.



தெலங்கானா என்பது நிஜாம்களால் ஆளப்பட்ட 'ஹைதராபாத் மாநிலம்'.(http://en.wikipedia.org/wiki/Hyderabad_state)
( ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் ஹைதராபாத் உள்ளடங்க மறுத்தது வரலாறு)

1956-இல் ஹைதராபாத்தின் சில பகுதிகள் மும்பை மற்றும் மைசூர் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டது. ஹைதராபாத்தில் வசித்த தெலுங்கர் அல்லாதவர்கள் மும்பை மற்றும் மைசூர் மாநிலங்களுக்கு குடியேறினர்.

மீதமுள்ள பகுதிதான் தெலங்கானா. அப்பகுதி மக்களின் விருப்பமில்லாமல் தெலங்கானா ஆந்திரா மாநிலத்துடன்[ராயலசீமா, ஆந்திரா (கடற்கரை பகுதி)]
இணைக்கப்பட்டது. இதை செய்தவர் ஜவகர்லால் நேரு. மக்கள் தொடர்ந்து தெலங்கானாவை மட்டும் விரும்பினால் ஐந்து வருடங்களுக்கு பின்னர் பிரிக்கப்படும் என போலி வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தெலங்கானா தனி மாநில போராட்டம் 1969-இல் இருந்து தொடர்கிறது

ஒன்றுபட்ட ஆந்திராவில் தெலங்கானா பகுதிதான் நிலப்பரப்பில் பெரியது.
கிட்டத்தட்ட 45 சதவிகிதம்.பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள், இயற்கை வளங்களை தெலங்கானா பகுதி கொண்டுள்ளது.

 தெலங்கானா பகுதி வளங்களை மட்டும்  இதர பகுதியினர் தங்கள் நலனுக்குப் பயன்படுத்திவிட்டு தெலங்கானா மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக இங்குள்ள நண்பர்கள் சொல்லுகிறார்கள். அதிலும் குறிப்பாக ராயலசீமா அரசியல்வாதிகளின் ஆதிக்கம்  மிக அதிகமாக உள்ளதாம்.

இவ்வாறாக ஆந்திர மாநிலத்தைப் பிரித்து ஹைதராபாத்தை தலைநகராகக் கொண்டு தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பது அரை நூற்றாண்டுகால கோரிக்கை. 


இதற்கான போராட்டங்கள் நாட்டையே உலுக்கியவை. தெலுங்கானா தனி மாநிலம் கோரி உயிரை மாய்த்தவர்கள் ஏராளம்! இதைத் தொடர்ந்து தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது குறித்து ஆராய கிருஷ்ணா கமிஷன் அமைக்கப்பட்டது. (http://en.wikipedia.org/wiki/Telangana_movement)
தெலுங்கா ராஷ்டிரிய சமிதி(TRS) கட்சிதான் தொடர்ந்து தெலுங்கானாவுக்கு குரல் கொடுத்து வருகிறது.

தெலுங்கா ராஷ்டிரிய சமிதி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யுனிஸ்ட், தெலுங்கு தேசம் ஆகிய  கட்சிகள் தனி தெலுங்கானாவை ஆதரிக்கின்றன.

ஆளும் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும்  பிரதான கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை நடுநிலை வகித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன.

மஜ்லிஸ் ஏ இதேஹாதுல் முஸல்மீன்(MIM), மார்ச்சிஸ்ட் கம்யுனிஸ்ட் ஆகிய கட்சிகள் தனி தெலுங்கானா அமைவதை  எதிர்க்கின்றன.
 
தெலுங்கானா விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர். தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளுக்கு வாக்களித்தால் ஹைதராபாத்துக்கு போக பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்று சொன்னவர். அதேபோல் தெலுங்கானாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கோஷம் போட்டு பதாகை ஏந்தியவர் ஜெகன்மோகன்.





கடந்த டிசம்பர் மாதத்தில் தெலுங்கானா அமைவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
தெலுங்கானா பற்றிய இறுதி முடிவை வருகின்ற 28-ஆம் தேதி அறிவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

'ஜெய் தெலுங்கானா'  கோஷம் வெற்றி பெறப் போகிறது. தெலுங்கானா தனி மாநிலம் அமைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இதற்கிடையில் ராயலசீமா பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி 'ஜெய் ராயலசீமா' என்கிற புது கோஷம் எழுந்துள்ளது.
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/rps-will-fight-for-rayalaseema/article4318203.ece

ஏற்கனவே ஆந்திராப்பகுதியை மட்டும் தனியாக பிரிக்கக் கோரி 1972 ஆம் ஆண்டில் 'ஜெய் ஆந்திரா' கோஷம் எழுப்பப்பட்டு பின்னர் வலுவிழந்தது.

ஆக மொத்தம் தெலுங்கானா,  ராயலசீமா, ஆந்திரா என மூன்று மாநிலங்கள் உருவாகும் நிலை உள்ளது.

என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பிரிவினை தேவையற்றது என்றே கருதுகிறேன்.  ஒரு மொழி பேசும் ஓர் இன மக்கள் பிரிந்து இருப்பது நல்லது அல்ல.
ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்  என்பது போல  இந்தப் பிரிவினையால் அரசியல்வாதிகள் பயன் பெறுவார்கள். எப்படியானாலும் மூன்று மாநிலங்களும் தன்னை எதிர்க்க மாட்டார்கள் என்பதால்  போலி இந்திய தேசியமும் பயன்பெறும்.

இந்தியா என்பது பல இனத்து மக்களால் ஒன்றுபட்டு கட்டமைக்கப்பட்ட இயற்கை தேசம் அல்ல.
ஆட்சியாளர்களின் வசதிக்கேற்ப பல இனத்து மக்களை அடிமைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட செயற்கை தேசம்.


அதற்கு ஆந்திர மாநில  பிரிவினை ஓர் உதாரணம்

வியாழன், 10 ஜனவரி, 2013

ராகி சங்கடியும், நாட்டுக்கொடி புலுசும்

ஹைதராபாத்தில் என்னை மிகவும் கவர்ந்த உணவு 

ராகி சங்கடி  -> தமிழில் கேழ்வரகு உருண்டை 

நாட்டுக்கொடி புலுசு -> தமிழில் நாட்டுக்கோழி குழம்பு






படத்தில் உள்ளபடி கேழ்வரகு உருண்டையும்,  நாட்டுக்கோழி குழம்பும் செய்துகொள்ளவேண்டும். நல்ல சூடான நிலையில்  கேழ்வரகு உருண்டை மீது நெய் ஊற்ற வேண்டும். பின்னர் கோழிக்குழம்பை  தொட்டு சாப்பிட வேண்டும்.

மிக ஆரோக்கியமான உணவு.
மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர்  அவர்கள் இந்த உணவுக்கு அடிமை.

 ஹைதராபாத்தில் 'ராயலசீமா ருச்சுலு' என்னும் உணவகத்தில் கிடைக்கும்.
http://www.rayalaseemaruchulu.com/

ராகி சங்கடி (2 உருண்டை) - 99rs
நாட்டுக்கொடி புலுசு - 285rs

இரண்டு நாட்கள் சாப்பிட்டேன், இன்னும் மறக்க முடியல. சென்னை வந்தபிறகு வீட்டில் சமைத்து சாப்பிடனும்.

நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.

புதன், 9 ஜனவரி, 2013

கூடங்குளத்திலிருந்து ஒரு கடிதம்

நன்றி: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22599:2013-01-09-23-51-18&catid=1:articles&Itemid=264

சனவரி 9, 2013
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை 627 104
திருநெல்வேலி மாவட்டம்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தி.மு.க. தலைவர் திருமிகு. கலைஞர் கருணாநிதி அவர்கள்,
சென்னை

மாண்புமிகு முதல்வர் அவர்களே, திருமிகு. கலைஞர் அவர்களே:

வணக்கம். தாங்கள் இருவரும் எதிரும் புதிருமான அரசியல் நடத்தி வந்தாலும், ஒட்டு மொத்த தமிழக மக்கள் நலனுக்காகக்கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவோ, நேரில் பார்த்துக்கொள்ளவோ மாட்டீர்கள் என்றாலும், தங்கள் இருவருக்குமாகச் சேர்த்து இந்தக் கடிதம் எழுதப்படவேண்டியிருக்கிறது. தற்போது மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்து வருகிற தங்கள் கட்சிகள்தான் தமிழகத்தின் அரசியலை, சமூகப் பொருளாதார விடயங்களை கடந்த அரை நூற்றாண்டாக மாறி மாறி மேலாண்மை செய்து வருகிறீர்கள்.

தமிழகத்தின் மிக முக்கியமான தங்கள் இருவரின் ஆளுமைகளைப் பற்றிய ஒப்பீடு செய்வதோ, தாங்கள் இருவரும் வழிநடத்தும் தமிழகத்தின் இரு முக்கிய திராவிட இயக்கங்களின் நிறை குறைகளைப் பற்றி அலசுவதோ, தங்கள் கட்சிகளின் ஆட்சிகளைப் பற்றிய விமரிசனத்தில் ஈடுபடுவதோ இந்தக் கடிதத்தின் நோக்கமல்ல. மாறாக, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வருகிற நாங்கள் அந்தப் பிரச்சினையில் தமிழக மக்களை எப்படி இருவருமாக சேர்ந்து கரிசனமின்றி கைவிட்டுவிட்டீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

துவக்கத்தில் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்த தி.மு.க., தனது நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசியபோது அதை அமோதிக்கவே செய்தது. கட்சியின் முக்கியத் தலைவர் திரு. முரசொலி மாறன் கூட கூடங்குளம் திட்டத்தை எதிர்த்தார். பின்னர் கூடங்குளத்தை ஆதரித்த தி.மு.க. அரசு 1989மே மாதம் 1-ம் நாள் கன்னியாகுமரியில் நடந்த எதிர்ப்பு மாநாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியது; ஒரிருவரைக் கொன்று, பலரைக் காயப்படுத்தியது. மன்மோகன் சிங் அமைச்சரவைக் கொண்டு வந்த இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்த தி.மு.க. மேலவை உறுப்பினர் திருமிகு. கனிமொழி 2007-ம் ஆண்டு நிகழ்த்திய தனது பாராளுமன்ற கன்னிப்பேச்சில் அணு ஆற்றல் துறையில் இந்தியா தன்னிறைவடைய வேண்டியதன் தேவையைப் பற்றி விவரித்து, கூடங்குளம் திட்டம் தொய்வடைந்து கிடக்கிறதே எனும் கவலையைத் தெரிவித்தார்.

ஆனால் தமிழக முதல்வர் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தீர்கள். அமெரிக்காவின் அணுசக்திக் கப்பல் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் 2007 யூன் மாதம் சென்னைக்கு வந்தபோது கதிர்வீச்சு ஆபத்து எழுமென்பதால் கப்பல் வரக்கூடாது என்று ஆணித்தரமாக ஆட்சேபித்தீர்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான உச்சக்கட்டப் போராட்டம் துவங்கியபோது, முதலில் உலையை ஆதரித்த முதல்வர், மக்கள் போராட்டத்தை மதித்து நிலைப்பாட்டை மாற்றி, மக்களுக்கு ஆதரவாக அமைச்சரவை தீர்மானம் இயற்றினீர்கள். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மாற்றுவழி மின்சாரத் திட்டங்கள் பற்றிப் பேசினீர்கள், திட்டமிட்டீர்கள். ஒரு முறை கூட கூடங்குளம் திட்டத்தை ஆதரித்துப் பேசவில்லை. “உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்று போராடும் மக்களுக்கு உத்தரவாதம் அளித்தீர்கள்.

கூடங்குளம் திட்டம் காலதாமதமானதற்கு முதல்வர்தான் காரணம் என்று கலைஞர் அவர்கள் குற்றம் சாட்டினீர்கள். தமிழகத்தின் மின்சாரப் பிரச்சினைக்கு கூடங்குளமே தீர்வு என்று சொல்லி, கையிலே வெண்ணெய்யை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் நெய்க்கு அலைவதாக முதல்வரை பகடிப் பேசினீர்கள்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்த கையோடு, முதல்வர் அவர்கள் எந்தக் காரணமும் சொல்லாமல், இனியன் குழு அறிக்கையை மக்களோடு பகிர்ந்து கொள்ளாமல், தங்கள் நிலைப்பாட்டை அவசரம் அவசரமாக மாற்றிக் கொண்டீர்கள். அனுசரணையோடு எங்களிடம் அளவளாவிய தாங்கள், அப்படியே மாறி எங்களைக் கைது செய்தீர்கள், தங்களையும், தங்கள் கட்சியையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்து வந்த உண்மையான உழைத்து வாழும் மீனவ மக்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசி, தடியடி நடத்தி, சுட்டுக் கொன்றது தங்கள் காவல்துறை.

இந்தியாவிலேயே மிகப்பெரிய, இறக்குமதி செய்யப்பட்ட, தரம் நிரூபிக்கப்படாத ரஷ்யாவின் அணுமின் நிலையம் கூடங்குளத்தில் கட்டப்படுகிறது. ஒரு மிகப்பெரிய அணு உலைப் பாலைவனம் “பூங்கா” என்ற பெயரில் உள்ளூர் மக்களுக்கு எந்த தகவலும் தரப்படாது, அவர்கள் அனுமதியின்றி, முன்தயாரிப்பு உதவிகளின்றி கட்டப்படுகிறது. தாங்கள் இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு அதனை ஆதரிக்கிறீர்கள்.

கூடங்குளத்திலிருந்து ஐநூறு மெகாவாட் மின்சாரம் எங்களுக்கு வேண்டும் என்று உரிமை கொண்டாடும் கேரள முதல்வர் தனது மாநிலத்தில் ஓர் அணு உலையைக்கூடத் திறக்க முன்வரவில்லையே, அதனை தாங்கள் இருவரும் கவனித்தீர்களா? கூடங்குளம் கழிவுகளை கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகத்தில் எங்குமே புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில முதல்வரும், கர்நாடகாவின் மத்திய காங்கிரஸ் அமைச்சர்களும் கடுமையாக எதிர்ப்பதை கவனித்தீர்களா? எங்களை தேச துரோகிகள் என்றும், இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும் என்றும் சொன்ன பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவில் கோலார் பிரச்சினையில் அணுசக்திக்கு எதிரான ஒரே நிலைப்பாடு எடுப்பதையும் தாங்கள் அவதானித்திருப்பீர்கள். தாங்கள் இருவரும் ஏன் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன் வரவில்லை? தாங்கள் இருவரும் இவ்வளவு சக்திமிக்க தலைவர்களாக, ஆட்சிப் பீடத்தில் இருக்கும்போதே தமிழர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு, இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் இந்திய அரசால்.

கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு தாருங்கள் என்று முதல்வர் கேட்கிறீர்கள்; அதற்கும் மத்திய அரசு செவிமடுக்கவில்லை. ஏதோ கடமைக்குக் கேட்டது போல, தாங்களும் அதனைக் கண்டு கொள்ளவில்லை. அதிக மின்சாரம் கிடைத்து, தமிழக மின்தட்டுப்பாடு தீர்ந்துவிட்டால் எங்கே அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு அதிகரித்துவிடுமோ, நமக்கு செல்வாக்கு குறைந்து விடுமோ என்று மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. உதவி செய்ய மறுக்கிறது. தமிழ் மக்களுக்காக உழைப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தங்கள் இரு கட்சிகளும், அரசுகளும் உண்மையில் தங்கள் நலனுக்காகத்தான் இயங்குகிறீர்களோ என்று நாங்கள், சாதாரண மக்கள், ஐயுறுகிறோம்.

இந்த நிலையில் இரண்டு அண்மை நிகழ்வுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி பகுதியில் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகத்தால் கடலோர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், மீஞ்சூரில் அமைந்துள்ள “கடல் நீரைக் குடிநீராக்கும்” திட்டத்தினால் பழவேற்காடு பகுதியைச் சுற்றியுள்ள பதினைந்து கிராமங்களில் மீனவ மக்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டு அம்மக்களுக்கு நிவாரணமும், வேலை வாய்ப்புக்களும் உதவிகளும் அறிவிக்கிற முதல்வர் கூடங்குளம் அணுமின் நிலையத்தால், அதனுள் இருக்கிற நான்கு “கடல் நீரைக் குடிநீராக்கும்” திட்டங்களால் எங்கள் பகுதி மக்களுக்கு எந்தத் தீங்கும் வராது, எதிர்ப்போர் “மாயவலை” விரிக்கிறார்கள் எனப் பேசுவது ஏன் என்று எங்களுக்குப் புரியவில்லை. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்கள்தான் தங்கள் மீன்பிடித் தொழிலால் மிக அதிகான வருமானத்தையும், அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தருகிறார்கள் என்பது தங்கள் இருவருக்கும் தெரியாததல்ல. துறைமுகத்தையும், அணு உலையையும் எப்படி ஒன்றாக பாவிக்க முடியும்? எங்கள் பகுதியில் ஐநூறு கோடி ரூபாய் செலவில் மக்கள் ஓடுவதற்கு சாலைகளும், சாவதற்கு மருத்துவமனைகளும் கட்டித்தருகிறோம் என்று அறிவித்திருக்கின்றன தங்களின் அரசுகள்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையை பாதுகாக்க சனவரி 19அன்று தங்கள் தலைமையில் ஒரு மிகப் பெரிய போராட்டமே அறிவித்திருக்கிறீர்கள். அந்த ஊருக்கு அருகாமையில் இடிந்தகரையில் கடந்த ஐநூறு நாட்களுக்கு மேலாக நாங்கள் தமிழினத்தின் மண்ணுக்காக, கடலுக்காக, நீருக்காக, காற்றுக்காக, உணவுக்காக, எதிர்கால சந்ததிகளுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம். தாங்களோ, தங்கள் கட்சியை சார்ந்த அதிகாரபூர்வமான ஒரு பிரதிநிதியோ இதுவரை எங்களை வந்து பார்க்கவில்லை. ஒரு சிலைக்குக் கொடுக்கும் மரியாதையை தமிழ் மக்களுக்குத் தர மறுப்பதேன்? தமிழர் வாழ்ந்தால்தானே திருவள்ளுவர் வாழ்வார்?

தமிழ் மக்களாகிய நாங்கள் தாங்கள் இருவரிடமும் மீண்டும் ஒருமுறை எங்கள் விண்ணப்பத்தை முன்வைக்க விரும்புகிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயங்க அனுமதிக்காதீர்கள். தமிழ் மண்ணில் இந்த அணு அரக்கனை கால் பதிக்க, கோலோச்ச, நம் வருங்கால தமிழனத் தலைமுறைகளைத் துன்புறுத்த அனுமதிக்காதீர்கள். தாங்கள் இருவரும் தங்களின் நீண்ட பொதுவாழ்வு மூலமாக தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் இதைச் செய்வீர்கள், செய்ய வேண்டும் என்று அன்போடும், பணிவோடும் கேட்டுக் கொள்கிறோம்.

சுயநலக் காரண காரியங்களை மட்டுமே கருத்திற்கொண்டு, தமிழ் மக்களைக் கைவிட்டால் ஒரு மிகப் பெரிய வரலாற்றுப் பிழையை செய்வதோடு எதிர்கால தமிழ் சமுதாயம் தாங்கள் இருவரையும், தங்கள் கட்சிகளையும் பழிக்க ஏதுவாகும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். “அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூம்” என்பது தமிழரின் உறுதியான நம்பிக்கை ஆயிற்றே? வணக்கம்.

தங்களன்புள்ள,

சுப. உதயகுமார், ம. புஷ்பராயன், மை.பா. சேசுராசு,

இரா.சா. முகிலன், பீட்டர் மில்டன்

அக்பருதீன் ஒவைசியும் பிரவீன் தொகடியாவும் விஷச்செடிகள்

இந்த வருட தொடக்கத்தில் பலருக்கும் நாக்கில் சனி குடியேறிவிட்டது என நினைக்கிறேன். பாலியல் பலாத்காரம் பற்றி பல அரசியல், ஆன்மீக தலைவர்கள்  வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். 

இந்நிலையில் மதவெறி பிடித்து  பேசிய இருவரைப் பற்றி காண்போம். இவர்கள் டிசம்பர் மாதமே பேசி விட்டார்கள். ஆனால் இப்போதுதான் விவகாரம் சூடு பிடிக்கிறது.

ஆந்திரா மாநிலம் மஜ்லிஸ் ஏ இதேஹாதுல் முஸல்மீன்(MIM) கட்சியின் எம்.எல்.ஏ அக்பருதீன் ஒவைசி கடந்த டிச.24ம் திகதி பொது மக்கள் முன்னிலையில் நிகழ்த்திய உரை:
"15 நிமிடங்களுக்கு காவல்துறை அகற்றப்பட்டால், 100 கோடி இந்துக்களை தாம் அழித்துவிட முடியும்". மேலும் அயோத்தியில் உள்ள ராமர் கோவில், அஜந்தாவில் உள்ள எல்லோரா குகை சிற்பங்களையும் கேலி செய்யும் வகையில் பேசியுள்ளதாக சர்ச்சை எழுந்தது.

ஓவைஸியின் அடியாட்களே பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நச்ரூதீனுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களுக்கும் காரணமானவர்கள் என 5 வருடங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.



அடுத்து விஷுவ ஹிந்து பரிஷத்(VHP) தலைவர் பிரவீன் தொகடியா.
ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள பாக்கியலட்சுமி கோவில் விவகாரம் தொடர்பாக டிசம்பர் 7 நடந்த பொதுக்கூட்டத்தில் இவர் பேசியது:
"பாக்கியலட்சுமி கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்காவிட்டால், ஹைதராபாத்தை அய்யோத்தியாக மாற்ற வேண்டிய நிலை வரும். இங்குள்ள முஸ்லிம்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவோம் "

 

இருவரது  பேச்சும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுமாதிரி அறிக்கை விடுபவர்கள் எல்லாம் பாதுகாப்பாக இருந்து கொள்வார்கள். தான் செய்த தவறை ஒத்துக்கொள்ளும் தைரியம் கூட இவர்களுக்கு இல்லை. 

இவர்கள் போன்ற அரைகுறைகளின் பேச்சைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு, மோதலில் ஈடுபட்டு பாதிப்புக்குள்ளாவது அப்பாவி மக்களே!

எனவே அக்பருதீன் ஒவைசி, பிரவீன் தொகடியா போன்ற விஷச்செடிகளை சமுதாயத்திலிருந்து ஒதுக்கி, அகற்றுவோம்.


பாக்கியலட்சுமி கோவில் விவகாரம் பற்றி சற்று பார்ப்போம்.
1960 வரை சார்மினார் அருகில் அப்படி ஒரு கோவில் கிடையாது என்று பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
நம்ம ஊரில் தெருவோர கோவில்கள் எப்படி தோன்றும் என்பது நாம் அறிந்ததே!



சார்மினாரின்  அழகிய தோற்றத்தை, பண்பாட்டை இக்கோவில் கெடுக்கிறது. இப்போது இந்த கோவிலை விரிவாக்கம் செய்கிறோம் என்னும் பெயரில் கலவரத்துக்கு வித்திடுகின்றன சில மதவாத சக்திகள். ஊருக்குள் எத்தனையோ பெரிய கோவில்கள் பாழடைந்து கிடக்கும்போது இந்த ரோட்டோர கோவிலுக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுக்க என்ன காரணம்? (இன்னும் சில தினங்களில் நேரில் சென்று பார்த்த பின்னர் இது பற்றி இன்னொரு கட்டுரை இடுகிறேன்)

அக்பருதீன் ஒவைசி நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
MIM கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது என ஆந்திர காங்கிரஸ் அறிவித்துள்ளது.
MIM கட்சியை தடை செய்வது பற்றி பேச்சு எழுகிறது.

அனைத்தும் சரி.
பிரவீன் தொகடியா மீது என்ன நடவடிக்கை?
பொறுத்திருந்து பார்ப்போம்.

சனி, 5 ஜனவரி, 2013

தீவிரவாதிகள் முஸ்லீம்கள் அல்ல!

அமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை.
துப்பாக்கி படத்தை கண்டித்து  இஸ்லாமியர்கள் போராட்டம்.
தற்போது விஸ்வரூபம் பட விவகாரம்.
இப்படி பல செய்திகள் வரும்போது இணையதளங்களில் பலரும் இஸ்லாமியர்களைக் கடுமையாக சாடுகிறார்கள்.
 (நீங்களும் இந்த பக்கங்களில் பாருங்கள்
http://tamil.oneindia.in/movies/news/2013/01/islamic-federation-demand-see-viswaroopam-167428.html

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=619386 )


பலரது பின்னூட்டங்களை பார்க்கும்போது  மனம் மிக வேதனைப் படுகிறது.
இஸ்லாமியர்கள் போராடவே கூடாது என்பது போல  இருக்கிறது பலரது கருத்து.

சில இஸ்லாமிய நண்பர்களிடம் இதுபற்றி விவாதித்தேன்.
சில நாட்கள் குரான் இணையதளத்தில்(quran.com, islamkalvi.com) படித்தேன். என்னை மிகவும் கவர்ந்த வரிகள்

"எவனொருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" 5:32

இன்னும் இதுபோன்ற பல நல்ல கருத்துக்களை இஸ்லாம் கூறுகிறது.

இஸ்லாமியத்தை முறையாக அறிந்தவன் பிறரை துன்புறுத்த மாட்டான், தாக்க  மாட்டான்.
தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவோரை ஏன் மத அடிப்படையில் அடையாளப் படுத்த வேண்டும்?

ஆப்கனில் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தவர்கள் கிறிஸ்துவத் தீவிரவாதிகளா?
குஜராத்தில் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தவர்கள் இந்துத் தீவிரவாதிகளா?
பர்மாவில் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தவர்கள் பௌத்தத் தீவிரவாதிகளா?
தமிழீழத்தில் தமிழர்களைக்  கொன்று குவித்தவர்கள் பௌத்தத் தீவிரவாதிகளா?

இல்லையே! அப்படி இருக்கும்போது பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதியை மட்டும் ஏன் 'முஸ்லிம் தீவிரவாதிகள்" என அடையாளப் படுத்த வேண்டும்?

தீவிரவாதச் செயல்களில் ஒருவன் ஈடுபட்டால் அவன் தீவிரவாதி. அவ்வளவுதான்.

சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே!

கலெக்டர் அலுவலத்திற்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த சென்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தீவிரவாதிகள்.


உதயக்குமார் அவர்களையும் அணு உலை எதிர்ப்பவர்களையும் சுட்டுக் கொல்ல  வேண்டும் எனக் கூறும் காங்கிரஸ்காரர்கள் தீவிரவாதிகள்.

மாவோயிஸ்ட் வேட்டை என்னும் பெயரில் அப்பாவி மக்களைக் கொள்பவர்கள் தீவிரவாதிகள்.


ராஜீவ் கொலை வழக்கை முறையாக விசாரிக்காமல் மூன்று தமிழர்களை தூக்கில் இட துடிப்பவர்கள் தீவிரவாதிகள்.


குஜராத்தில் சிறுவர்களைக் கூட விட்டு வைக்காமல் தீக்கிரையாக்கியவர்கள் தீவிரவாதிகள்.

கரசேவை என்னும் பெயரில் பிற மதத்தினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் தீவிரவாதிகள்.


இப்படி அனைத்து தீவிரவாதிகளையும் இங்கே வளர்த்து விட்டு, எங்கோ பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதிகளுக்கு 'முஸ்லிம் தீவிரவாதிகள்' என பட்டம் கொடுத்து ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக பார்த்தால்  நீங்களும் தீவிரவாதியே!

பிற மனதை நோகடிக்காமல் இருப்போம்! மனித நேயம் வளர்ப்போம்!


--தொடரும்